Thursday, October 15, 2015

நிறைய பேர் வாளைத் தீட்டியபடி காத்திருந்தனர்: வெற்றி குறித்து தோனி




இந்தூர் ஒரு நாள் போட்டியில் வென்ற பிறகு ஆட்ட நாயகன் தோனி மற்றும் அணி வீரர்கள். | படம்: பிடிஐ.

இந்தூர் ஒருநாள் போட்டியில் 92 ரன்களை எடுத்து பிறகு அருமையாக பந்து வீச்சு மாற்றங்கள், களவியூகங்கள் அமைத்து குறைந்த இலக்கை கையில் வைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திக் காட்டிய கேப்டன் தோனி ஆட்டம் முடிந்த பிறகு வெற்றி குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி சில கருத்துகளை பரிமாறிக் கொண்டார்.

அதாவது வெற்றி பெற முடியாது போயிருந்தால், “நிறையபேர் வாளைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தனர், அதாவது நிறைய பேர் நான் தவறுகள் செய்வதற்காகக் காத்திருந்தனர். ஆனால் சுலபமான ஆட்டம் அல்ல இது. இன்னும் கொஞ்சம் ரன்களை சேர்த்திருக்க வேண்டும். 

பந்து வீச்சையும் நன்றாகத் தொடங்கவில்லை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீச, பிற்பாடு வேகப்பந்து வீச்சும் இணைந்து கொண்டது. ஒட்டுமொத்தமாக திருப்திகரமான வெற்றியல்ல, ஆனால் நல்ல வெற்றி. இன்னும் கூட சிறப்பாக ஆட வேண்டும். 

திறனுக்கேற்ப விளையாடுவதில்லை, பந்துவீச்சு பேட்டிங் இரண்டிலுமே 80% கூட திறமை வெளிப்படவில்லை. ஒரு முழுமையான பேட்டிங் வரிசையாக இன்னும் சரியாக ஆடவில்லை. ஆனால் மீண்டு வந்து வென்றுள்ளோம். 

தாஹிர், ரபாதா பேட் செய்து கொண்டிருந்த போது அவர்களை வீழ்த்த 2 நல்ல பந்துகளை வீசவேண்டும் என்று நினைத்தோம். ஆட்டம் எங்கள் கையில் இருந்தது என்று நான் கூற மாட்டேன். ஆனால் சரியான இடத்தில் வீசினால் இரண்டு பந்துகள் போதும் அவர்களை வீழ்த்த.

கடந்த 2 அல்லது இரண்டரை ஆண்டுகளாக டாப் ஆர்டர் வரிசை சிறப்பாக பேட் செய்து வந்தபோது பின்வரிசை வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு குறைவாகவே கிடைத்து வந்தது. சுரேஷ் ரெய்னா தவிர வேறு எவரும் இறங்கியவுடன் பெரிய ஷாட்களை ஆடுவதில் விருப்பம் காட்டவில்லை.

அக்சர் படேல் குறித்து...

அக்சர் படேல் பந்தை பெரிய அளவில் திருப்புபவர் அல்ல. ஆனால் அவர் சரியான லெந்தில் வீசினார். ஹர்பஜன் அனுபவஸ்தர், ஆனால் இருவரும் பந்துவீச்சு முறைகளில் சோதனை முயற்சிகளில் இறங்கவில்லை, அதாவது ஓவர் பிளைட் அல்லது குறைந்த பிளைட் என்பது தேவைப்பட்டது, ஒட்டுமொத்தமாக அவர்கள் நல்ல முறையில் செயல்பட்டனர்.

இவ்வாறு கூறினார் தோனி.

No comments:

Post a Comment